
காட்டு பத்திரகாளியம்மன் கோவில் உள்ள வரலாற்று சிலைகள் -அறிவோம் திருமங்கலம் வரலாறு
————————————————
நமது திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் இறைவனின் வடிவங்களை தாண்டி , வரலாற்றில் வாழ்ந்த மனிதர்களின் சிலை உருவங்களும் காணப்படுகின்றன.
குறிப்பாக இப்பதிவில் இருக்கும் சிற்பங்கள் பத்திர காளி அம்மன் கோவிலின் கருவறைக்கு முன்பதாக உள்ள அர்த்த மண்டபத்தில் உள்ள தூண்களில் காணப்படும் சிற்பங்களை பற்றி பார்ப்போம்.
வணங்கிய நிலையில் உள்ள ஆண் சிலை 1
———————————
காது வளர்க்கப்பட்டு அதில் வளையம் போன்ற தோடு நீண்டு தொங்குகின்றது.
கழுத்திலும் அணிகலன்கள் காணப்படுகின்றன.
முழங்கையிலும் ஆபரணங்கள் காணப்படுகின்றன.
கையிலும் வளையல் அல்லது காப்பு போன்ற ஆபரணம் உள்ளது.
மேலாடை இல்லை ஆனால் இடையின் கீழே ஆடையும் அந்த ஆடையை பிடித்துகொள்ள அணிகலன் அல்லது துணி போன்ற அமைப்பு உள்ளது.
தலையில் அரசர்குரிய கொண்டை அமைப்பு உள்ளது ஆனால் அரசர்க்குரிய மற்ற அடையாளங்களான உடைவாளோ,வெண் கொற்றக்குடையோ போன்றவை இல்லாததால் இவர் அரசரா என்பதை உறுதி செய்ய்ய இயலவில்லை.
வணங்கிய நிலையில் உள்ள பெண் சிலை 1
———————————-
மேலே கூறிய ஆணின் சிலைக்கு எதிரே உள்ள தூணில் அதே ஆணின் சிலை அமைப்பை போன்றே பெண்ணின் சிலை அமைப்பும் இருக்கின்றது.
இவரும் அரச குடும்பத்திற்குரிய கொண்டை அமைப்புடன் காணப்படுகின்றார்.
தியான நிலையில் உள்ள சிற்பம்
————————-
மேலே கூறிய இரண்டு சிற்பங்களும் நல்ல நிலையில் அமைந்துள்ளன. ஆனால் குறிப்பிட்ட இந்த சிற்பம் பொலிவிழந்து மங்கிய நிலையில் காணப்படுகின்றது. ஒருவேளை இச்சிற்பம் ஏற்கனவே பார்த்த இரு சிற்பங்களும் வடிக்கப்படுவதற்கு முன்னால் அமைந்த சிற்பமாக இருக்கலாம்.
அல்லது வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு பொலிவிழந்திருக்கலாம்.
இச்சிலையை பொறுத்தவரை சிலையில் காணப்படும் உருவம் நன்கு சமணமிட்டு கைகளை முன்னே வைத்து ஆழ்ந்த தியான நிலையில் உள்ளது. இச்சிலையை பார்க்கும் போது சமண சிலைகளை போன்ற அமைப்பை நமக்கு நினைவூட்டுகிறது. ஏற்கனவே குண்டாற்றுப்பகுதியில் பழமையான சமணர் சிலைகள் கிடைத்துள்ளது என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டால் இது ஓர் சமண சிற்பமாக இருக்க வாய்ப்புள்ளது என்று கருதமுடியும்.
ஆனால் அதே நேரம் மார்பில் அந்தணர் அணியும் பூனூல் எனும் முப்பரி நூல் போன்ற வடிவமும் காணப்படுவதாக தெரிகிறதுஅதே போல் பொதுவாக சமணர் சிலைகளில் தலைக்கு மேலே காணப்படும் குடை போன்ற அமைப்பு இச்சிலையில் இருப்பதாக தெரியவில்லை .
( சிலை வடிவம் தெளிவாக இல்லாததால் மேலே சொன்ன விசயங்களை உறுதிப்படுத்த முடியவில்லை)
வணங்கிய நிலையில் உள்ள ஆண் சிற்பம் 2
———————————-
இதே மண்டபத்தில் மற்றொரு தூணில் மற்றுமொரு வணங்கிய நிலையில் உள்ள நின்ற நிலையில் உள்ள ஆண் சிலை வடிவம் காணப்படுகின்றது.
சிலை மிகவும் சிதைந்துள்ளதால் உருவ அமைப்பையோ அல்லது வேறு எந்த விவரங்களையும் அறிந்துகொள்ள முடியவில்லை.
இதே கோவிலில் பாண்டியர்களின் இணை கயல் சின்னம் இருந்ததை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம் . ஆனால் இந்த கயல் சின்னங்கள் பாண்டியர்கள் அமைத்ததா அல்லது பாண்டியர்களின் பின்னால் வந்தவர்கள் பயன்படுத்தியதா என்பது ஆராய்ச்சிக்குரியது.
குறிப்பு:
இப்புகைப்படங்கள் சில வருடங்களுக்கு முன்பு எடுத்தவை.
திருமங்கலம் வரலாறு குறித்த உங்களுக்கு தெரிந்த விசய்ங்களை இப்பதிவில் கமெண்டில் தெரிவித்து திருமங்கலம் வரலாற்றை கட்டமைக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். கமேண்ட் செய்ய விரும்பாதவர்கள் நம் பக்கத்திற்கு இன்பாக்ஸ் செய்தியாகவும் அனுப்பலாம்.
அதே போல் வாழ்ந்த மனிதர்கள் ,நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்த சமீபத்திய வரலாற்று செய்திகளையும் நம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள் இதை தனிப்பதிவாக நாங்கள் செய்து எல்லோருக்கும் கொண்டு செல்ல நாங்கள் உதவுகிறோம்.